புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2016

முரசு சின்னத்தை முடக்கப் போகும் மூவர் அணி? -வழிகாட்டும் 'வைகோ பார்முலா'

கேப்டன் கட்சிக்குள் வீசிய புயல், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பொதுக் குழு உறுப்பினர்களைத் திரட்டி முரசு சின்னத்தை
முடக்கும் வேலைகளில் மூவர் அணி ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

தே.மு.தி.கவில் இருந்து போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்ளிட்டோர் தலைமைக்கு எதிராக குமுறிக் கொண்டிருக்க, இவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய விஜயகாந்தும், பிரேமலதாவும் மவுனமாக இருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சத்தியம் செய்யாத குறையாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
" தே.மு.தி.கவுக்கென்று கட்சி விதி இருக்கிறது. கட்சிக்குள் நடக்கும் களேபரங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது கேப்டன்தான். அவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்றால், சுதீஷோ, பிரேமலதாவோ விளக்கம் அளிக்கலாம். ஆனால், தே.மு.தி.கவின் பிரசார பீரங்கியாக வைகோ விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். வைகோ மீது சந்திரகுமார் வைக்கும் குற்றச்சாட்டுகள் சரியா? என்பதற்கு கேப்டன்தான் விளக்கம் அளிக்க வேண்டும். 'கட்சியை உடைப்பது என்பது தி.மு.கவுக்கு கைவந்த கலை' என்கிறார் வைகோ. இந்த விஷயத்தில் சந்திரகுமாருக்கு வழிகாட்டியே வைகோதான்" என அதிர வைத்த தி.மு.க நிர்வாகி ஒருவர், தொடர்ந்து, 

" 93-ம் ஆண்டு தி.மு.கவை விட்டு வைகோ வெளியேறியபோது, 9 மாவட்டச் செயலாளர்களை தன்னோடு அழைத்துக் கொண்டு வந்தார். 'நாங்கள்தான் உண்மையான தி.மு.க' என்று சொல்லிக் கொண்டு, தி.மு.கவை கைப்பற்றவும் முயற்சி எடுத்தார். அப்போது எதுவும் பலிக்கவில்லை. இதன்பிறகு மறுமலர்ச்சி தி.மு.க என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். அன்றைக்கு அவரோடு வந்தவர்கள் யாரும் இன்று அவருடன் இல்லை என்பது வேறு கதை. இதேபாணியில்தான் சந்திரகுமாரும் கிளம்பியிருக்கிறார். தே.மு.தி.கவில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் சந்திரகுமார் பக்கமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றில் ஒரு பங்கு பொதுக் குழு உறுப்பினர்கள் இருந்தாலே, தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து கட்சியின் சின்னத்தை முடக்க முடியும். 'நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க'  என வாதாட முடியும். தேர்தல் நெருக்கத்தில் இந்த சண்டையை சமாளிக்கவே, தே.மு.தி.கவுக்கு நேரம் சரியாக இருக்கும். வைகோவைப் போல, மறுமலர்ச்சி தே.மு.தி.க என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, முரசு சின்னத்தை கேட்கும் முடிவிலும் சந்திரகுமார் உள்ளிட்ட மூவர் அணி தயாராக இருக்கிறது. இதற்காக, பெரும் எண்ணிக்கையில் கட்சி தொண்டர்களை சென்னைக்குக் கொண்டு வரும் முடிவில் இருக்கிறார்கள். இவர்களை சமாளிக்க தே.மு.தி.க தலைமை என்ன ஆயுதத்தை எடுக்கப் போகிறது? என்பதுதான், கேப்டனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" என்றார் அவர். 

ஒரே இரவில், இப்படியொரு அதிரடியை தே.மு.தி.க முகாமுக்குள் நிகழ்த்த காரணமானவர் என தி.மு.கவின் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஒருவரைக் கை காட்டுகிறார்கள். கல்வி தந்தையான அவரின் சிஷ்யன்தான், மேட்டூர் தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்திபன். அந்தத் தலைவரின் முன்னாள் கட்சிக்காக மிகப் பெரிய மாநாடுகளையும் நடத்திக் காட்டியவர் பார்த்திபன். அவர் மூலமாகத்தான் எல்லா வேலைகளையும் தி.மு.க. தலைமை செய்வதாகச் சொல்கிறார்கள். உலகத்தை ரட்சிக்கும் அவர்தான், அதிருப்தி தே.மு.தி.கவையும் ரட்சித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். 

முரசு சின்னத்தின் கதி என்னவாகும்? என்பதை பதைபதைப்போடு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள். 

ad

ad