மன்னாரில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 வது தடவையாக இன்று புதன்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது. இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை குறித்த புதை குழி தோண்டப்பட்ட போதே மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதவரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதன் கிழமை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்ட போது அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு சமூகமளிக்கவில்லை.
இதனால் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படவில்லை.
இதேவேளை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உள்ள இடத்திற்கு வருகை தந்த குற்ற புலனாய்வுப் பிரிவினர் 5 வது நாளாகவும் இன்று புதன்கிழமை தமது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
மீண்டும் நாளை வியாழக்கிழமைகிழமை நீதவான் முன்னிலையில் குறித்த பணிகள் 18 வது தடவையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.