நான் தி.மு.க.வில் இல்லை என்றார் நடிகர் டி.ராஜேந்தர்.
தி.மு.க.தலைவர் கருணாநிதியை தான் சந்தித்தது ஒரு அரங்கேற்றப்பட்ட காட்சி என்றும் அவர் தெரிவித்தார்.தன் மகள் இலக்கியாவின் திருமண அறிவிப்பை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அப்போது அவர்
கூறியதாவது:
கருணாநிதி என் குரு. அதோடு ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக அவர் இருந்துள்ளார். நானும் அந்த கட்சியில் இருந்தவன் என்பதால் அவரை சந்தித்தேன். கருணாநிதியை நான் சந்தித்தது அரங்கேற்றப்பட்ட காட்சி.
ஆனால் அரங்கேற்றப்படாத காட்சிகள் இன்னும் பல உண்டு. தக்க தருணம் பார்த்து அவற்றை வெளியிடுவேன். அப்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். 3 ரூபாய் கொடுத்து தி.மு.க. அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை என்பதற்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அந்த அட்டையை வாங்கினால்தான் தி.மு.க.வில் சேர்ந்ததாக அர்த்தம்.
பாரதீய ஜனதா கட்சியிலிருந்து அழைப்பு வந்தது. நான் மறுத்து விட்டேன். ஆற்காடு வீராசாமி அழைப்பால்தான் கருணாநிதியை சந்தித்தேன்.
என் மகள் இலக்கியா - அபிலாஷ் திருமணம் பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார் டி.ராஜேந்தர்.