அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிரட்டும் வகையில், விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்,
“விடுதலைப் புலிகளை தமிழ்பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அரசியல் அங்கீகாரம் அளிக்கும் வகையில், 2001இன் பிற்பகுதி தொடக்கம் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நெருக்கமான உறவை மையப்படுத்தியே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்த விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
போரின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புலி ஆதரவு செயற்பாடுகள் குறித்து, அனைத்துலக சமூகத்துக்கும் தகவல் அளிக்கப்படும்.
நாடாளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களை நாம் விசாரிக்க உத்தேசித்துள்ளோம்.
2006 நடுப்பகுதியில், போருக்கு இட்டுச் சென்ற விடுதலைப் புலிகளின் தந்திரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய செல்வாக்கு செலுத்தியது என்பது குறித்து அவர்களிடம் விசாரிப்பதே எமது நோக்கமாக உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி,
“2001 நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை வெற்றி கொள்வதற்கு விடுதலைப் புலிகள் பின்புலத்தில் இருந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதுபற்றிய ஒளிப்பட ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.
2005 அதிபர் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் உத்தரவுக்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் கோரிய சூழ்நிலை குறித்தும் அவர்களிடம் நாம் விசாரணை நடத்தவுள்ளோம்.
2005 நொவம்பர் 10ம் நாள் கிளிநொச்சியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவு குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று சில இராணுவ அதிகாரிகள் உணர்ந்திருந்த போதிலும், அத்தகைய விசாரணைகள் நடத்தப்படவில்லை.
2001, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2010 அதிபர் தேர்தலின் போது, முன்னாள் இராணுவத் தளபதி சரத் போன்சேகாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். |