புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

இயக்குநர் ஷங்கரே... திரையுலகை விட்டுப் போ'- இப்படிக்கு ரோஸ்


அர்னால்டு, ஊழியர்கள் சம்பளப் பாக்கி, கோர்ட் பிரச்னை என்று பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் ரிலீஸ் ஆனது ஷங்கரின் ‘ஐ’. திரைக்கு வந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் பரபரப்பு அடங்காமலே ஓடிக்கொண்டிருக்கிறது ‘ஐ’. இந்த முறை பிரச்னையைக் கிளப்பியிருப்பவர்கள் திருநங்கைகள். ‘‘ஷங்கரின் ‘ஐ’ படம், திருநங்கைகளின் கேரக்டரைக் கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது!’’ என்று டி.வி. பெர்சனாலிட்டியும் நடிகையுமான ரோஸ், ‘ஐ’ படத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளார். 


‘‘என்னாச்சு ரோஸ்?’’ என்று சென்னையில் உள்ள தணிக்கைக் குழு அலுவலகம் முன்பு, திருநங்கைகளைத் திரட்டி போராட்டம் பண்ணிக் கொண்டிருந்த ரோஸிடம் கேட்டோம்.

‘‘ஷங்கர் ஒரு மிகப் பெரிய ஃபிலிம் பெர்சனாலிட்டி. ஆனால், அவர் படத்தில் இப்படி சில சீப்பான காட்சிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் ‘ஐ’ படத்திற்கு என்னைத்தான் டப்பிங்கிற்கு அழைத்தார்கள். ஸ்டுடியோவில் அப்போது யாரும் இல்லை. என்னை டப்பிங் பேசச் சொன்னார்கள். அப்போதே சில இரட்டை அர்த்தத் தொனி நிறைந்த வசனங்கள் என்னை முகம் சுளிக்க வைத்தன. திருநங்கைகள் என்றாலே சமூகத்தில் எல்லோருமே தப்பான கண்ணோட்டத்தில்தான் பார்க்கின்றனர்; பேசுகின்றனர். ‘என்னால் இதற்கு டப்பிங் பேச முடியாது. தயவுசெய்து இயக்குநரிடம் சொல்லி இந்தக் காட்சிகளை நீக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால் போராட்டம் பண்ணுவோம்’ என்று அப்போதே எச்சரித்தேன்.

‘திருநங்கைகள்தானே... இவர்களால் என்ன செய்துவிட முடியும்’ என்று நினைத்தார்களோ என்னவோ, படம் அப்படியேதான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தின் ஹீரோ என்றால் அவருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. திருநங்கைகளுக்குக் காதல் வரக் கூடாதா? இப்படி அடுத்தவர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்திப் படம் எடுப்பதற்குப் பதில், இயக்குநர் ஷங்கர் பேசாமல் திரையுலகத்தைவிட்டு வெளியேறுவதே நல்லது.
இவர் ஒன்றும் நாட்டைத் திருத்தி விடப்போவதில்லை. விக்ரம், சந்தானம் போன்றோருக்கும் எங்கள் காட்டமான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். கமிஷனரிடமும் இதுபற்றி  புகார் அளிக்க இருக்கிறோம்" என்று நம்மிடம் படபடத்துப் பொரிந்து விட்டார் ரோஸ்.

ஆனால், இந்தப் படத்தில் விக்ரமை ஒருதலையாகக் காதலிக்கும் கேரக்டரில் நடித்துள்ள திருநங்கையான ஓஜஸ் ரஜனி, ‘‘நான் ஷங்கரின் எத்தனையோ படங்களில் மேக்-அப் ஆர்ட்டிஸ்ட்டாகப் பணி புரிந்திருக்கிறேன். ஷங்கர் மிகவும் நல்ல இயக்குநர். அவர் அப்படி ஒன்றும் ‘ஐ’ படத்தில் திருநங்கைகளைக் கொச்சைப்படுத்தியதுபோல் எனக்குத் தெரியவில்லை’’ என்கிறார்.

எப்படியோ படத்துக்கு இன்னொரு பப்ளிசிட்டி கிடைச்சிருச்சு!

ad

ad