5 அணிகள் இடையிலான சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் கடைசி சுற்று சிங்கப்பூரில் நடந்தது.
லீக் முடிவில் புள்ளி பட்டியலில் 8 வெற்றியுடன் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் இந்தியன் ஏசஸ் அணியும், 7 வெற்றிகளுடன் 2–வது இடத்தை பெற்ற சிங்கப்பூர் ஸ்லாமர்ஸ் அணியும் நேற்று இறுதி ஆட்டத்தில் சந்தித்தன.
தலா ஒரு செட் வீதம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டியில் ஜாம்பவான் பிரிவில் சிங்கப்பூர் அணியின் கார்லஸ் மோயா 6–4 என்ற செட் கணக்கில் இந்தியன் ஏசஸ் வீரர் பாப்ரிஸ் சாண்டோராவையும், பெண்கள் ஒற்றையரில் சிங்கப்பூரின் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 6–5 (7–3) என்ற செட் கணக்கில் ஏசஸ் அணியின் குஸ்னட்சோவாவையும் (ரஷியா), ஆண்கள் ஒற்றையரில் சிங்கப்பூரின் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6–3 என்ற செட் கணக்கில் பெர்னர்ட் தாமிக்கையும் (ஆஸ்திரேலியா), ஆண்கள் இரட்டையரில் மெலோ–வாவ்ரிங்கா ஜோடி 6–3 என்ற செட் கணக்கில் போபண்ணா–டோடியையும் தோற்கடித்தனர். ஆறுதல் அளிக்கும் வகையில் கலப்பு இரட்டையரில் மட்டும் இந்தியன் ஏசஸ் ஜோடியான சானியா மிர்சா–ரோகன் போபண்ணா 6–2 என்ற செட் கணக்கில் டஸ்டின் பிரவுன்–பிளிஸ்கோவா இணையை வீழ்த்தினர்.
முடிவில் சிங்கப்பூர் ஸ்லாமர்ஸ் அணி 26–21 என்ற கேம் கணக்கில் இந்தியன் ஏசசை சாய்த்து கோப்பையுடன், ரூ.6½ கோடி பரிசுத்தொகையையும் தட்டிச்சென்றது.