யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் எம்முடன் இணைந்தே செயற்படுகின்றனர்
இதனால் ஒரு நிர்வாகக் கட்டமைப்புடன் எமது வேலைத்திட்டங்களை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது என யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ,
நாட்டில் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் ஒன்று சேர்ந்து இயங்கும் போது தான் முழுமையான செயற்றிட்டத்தை பெற முடியும்.
எனவே தற்போது எமது நிர்வாகத்துடன் யாழ்.மாவட்டத்தில் உள்ள இராணுவம், பொலிஸ் ஆகியோரது பங்களிப்பு எமக்கு முழுமையாக இருக்கின்றது இதனால் சரியான நிர்வாகக் கட்டமைப்புடன் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
எனினும் பல வருடங்களாக இராணுவத்தினருக்கும் பொது மக்களிற்கும் நீண்டதொரு இடைவெளி இருந்து வந்தது ஆனால் தற்போது யாழ். மாவட்டத்தில் மாணவ செல்வங்களின் கல்வி முன்னோற்றத்தினை அடிப்படையாக கொண்டு இராணுவம் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வருகின்றனர்
அத்துடன் கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கைத்தர அபிவிருத்தியிலும் இராணுவத்தினர் எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர்.
அதன்படி யாழ். மாவட்ட வீடமைப்பு திட்டத்தில் எம்மால் அமைக்கப்பட்ட 25 ஆயிரம் வீடுகளில் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை படையினர் கட்டிக் கொடுத்துள்ளனர்.
மேலும் மீள்குடியோற்றத்தின் போதும் துப்பரவு வேலைகளுக்கு இயந்திரம் மற்றும் இராணுவத்தினரை ஈடுபடுத்தி சேவையினை மேற்கொண்டுவருகின்றனர்.
எனவே நிர்வாக நடவடிக்கைகளுடன் அவர்கள் செய்கின்ற இந்த ஒத்துழைப்பானது நிச்சயமாக ஒரு நல்ல நிர்வாக கட்டமைப்பை யாழில் ஏற்படுத்த சிறந்த ஒரு சந்தர்ப்பமாகவே அமையும்.
அத்துடன் கல்வியில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது அண்மையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளது.
நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ஆரம்ப காலத்தைப் போல் கல்வியாளர்கள் அதிகரிக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.