புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2012



பரிதி படுகொலை கொடுந்துயர் சம்பவம் : வைகோ அதிர்ச்சி

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பரிதி பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நவம்பர் 8 ஆம் தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஒர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம்; தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், ஃபிரான்ஸ நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்தரன், பாரீஸ் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது.
நான் உயிராக நேசித்த விடுதலைப்புலிகளின் தளபதிகளுள் பரிதியும் ஒருவர். 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில், வன்னிக்காடுகளில் இடைவிடாத இந்திய-சிங்கள இராணுவத் தாக்குதல்களுக்கு நடுவே, வான்வெளிக் குண்டு வீச்சுக்கும் பீரங்கி தாக்குதளுக்கும் ஊடே பிரபாகரனோடு நான் இருந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம், கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்தில் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை, நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்த நிகழ்ச்சியின் போது உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்ததை எண்ணும்போதே மனம் பாறையாய்க் கனக்கிறது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்சில், கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற ஈழத்தமிழர் கருத்து அரங்கத்தில் பங்கு ஏற்கச் சென்றபோது, மே 30 ஆம் தேதி பாரீஸ் நகரத்துக்குச் சென்றேன். அங்குதான் ஈழத் தமிழர்களை நான் சந்திக்க சகோதரர் பரிதி ஏற்பாடு செய்து இருந்தார்.
1990 ஆம் ஆண்டு யுத்தத்தில் காயமுற்று கால் நடக்கமுடியாத நிலையில், சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் பிரான்சு நாட்டின் புலிகளின்  பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்.
பிரான்சு நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டபின், பரிதி கைது செய்யப்பட்டு, நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இயக்கத்தின் பல முயற்சிகளால் அவர் விடுதலை ஆனார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை இனவாத அரசின் உளவுத்துறையின் பின்னணியில், கொடியோரால், ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று மீண்டார்.
இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை முனைப்பாக ஏற்பாடு செய்துவந்த நிலையில், கேணல் பரிதி நிராயுதபாணியாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சகமான கொடுஞ்செயலால் ஒரு வீரச் சகோதரனை தமிழ் ஈழம் இழந்து விட்டது.
பரிதியின் துணைவியாரையும், அவரது பிள்ளைகளையும் எண்ணுகையில், தாங்க முடியாத துக்கம் மேலிடுகிறது. அந்த வீரத் திருமகனுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன்.
தலைமைக்கும், இயக்கத்துக்கும், தமிழ் ஈழ விடுதலை இலட்சியத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாவீரன் பரிதி, எந்தக் குறிக்கோளுக்காக இறுதி மூச்சு அடங்கும்வரை போராடினாரோ, அந்த சுதந்திரத் தமிழ் ஈழ இலட்சியத்தை வென்றெடுக்க துயர் சூழ்ந்த இந்த நேரத்தில் சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார்.

ad

ad