இலங்கை விவகாரம்! தி.மு.க.வை சமாதானப்படுத்த காங்கிரஸ் முயற்சி
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை சேர்க்க வேண்டும் என்றும், நிறைவேற்றப்படாத பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தொடர்பாக, தமிழக மக்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும்.
தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இது மிகவும் உணர்வுபூர்வமான, முக்கியமான பிரச்சினையாகும்.
எனவே, திமுக தலைவர் கருணாநிதி தனது உணர்வுகளை குறிப்பிட்டுள்ளார்.
இதில் உள்ள அனைத்து அம்சங்களையும் பிரதமர் மன்மோகன் சிங் நிச்சயமாக பரிசீலனை செய்வார்.
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது என்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
மக்களவையில் 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக வுக்கு ஒரு மத்திய கபினட் மந்திரி, 4 இணை மந்திரிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.