பொலிஸ் அதிகாரத்தை வழங்குங்கள்! முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
பொலிஸ் அதிகாரத்தை தம்வசம் வைத்துக் கொண்டு வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கடமையாகும் எனக் கூறுவது எவ்விதத்தில் நியாயமாகும். எனவே பொலிஸ் அதிகாரத்தை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது,
வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும் என்றும் இராணுவத்தினை அகற்றுமாறு யாரும் கோர முடியாதெனவும், துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட வேண்டுமென்பது மக்கள் கோரிக்கை அல்ல என்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வட மாகாணத்தை பொறுத்த வரை இராணுவத்தினரின் வெற்றியை முன் வைத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆனையிறவு உட்பட பல்வேறு பிரதேசங்களில் இராணுவத்தினருக்கான நினைவுச் சின்னங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது மேலும் பல நினைவுச் சின்னங்கள் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதை கொண்டாடவே இராணுவத்தினர் இந்த நினைவுச் சின்னங்களை நிர்மாணிக்கின்றனரே தவிர, தமிழ் மக்கள் இராணுவச் சின்னங்களை நிர்மாணிக்குமாறு ஒரு போதும் கோரிக்கையை முன்வைக்கவில்லையென்பது தான் உண்மையாகும்.
பாதுகாப்பு செயலாளராகட்டும், இராணுவத் தளபதியாகட்டும், அரசாங்கமாகட்டும் அவர்கள் பார்வையில் பயங்கரவாதிகளையே கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் ஏதோவொரு இலட்சியத்துக்காக போராடிய போராளிகள், அம் மக்களது பிள்ளைகள் உறவுகள் மக்களுக்காக கொல்லப்பட்டவர்கள் என்பதே அவர்களது கருத்தாகும்.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் இராணுவத்தினரால் வடக்கிலிருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், கல்லறைகளை தரைமட்டமாக்கப்படுவது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும்.
கல்லறைகளை தரை மட்டமாக்குவது சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தரை மட்டமாக்குவதால் அவர்களின் கனவுகளை சிதைத்து விட முடியாது.
சட்டம் ஒழுங்கு
வடக்கில் தற்போது சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இது நகைப்புக்குரிய கருத்தாகும். ஏனென்றால் இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பொலிஸ் அதிகாரத்தை மத்திய அரசாங்கமும் பாதுகாப்பு செயலாளரும் தம்வசம் வைத்துக்கொண்டு வடக்கில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும் என்றால் அது எவ்வாறு சாத்தியமாகும்.
எனவே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது முதலமைச்சரின் கடமையாகும் என வெறும் வாய் மூலம் தெரிவிக்காது பொலிஸ் அதிகாரம் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் வடக்கில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமையை முதலமைச்சர் முன்னெடுப்பார்.
கொள்ளைகள்
வட மாகாணத்தில் இன்று நாளுக்கு நாள் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆனால் இது தொடர்பில் பொலிஸார் தமது கடமைகளை சரிவரச் செய்யவில்லை. கொள்ளைக்காரர்களை கைது செய்வதில் அசமந்தம் காட்டப்படுகிறது.
இராணுவ மயம்
வட மாகாணத்தில் பத்து இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அம்மக்களை 1½ இலட்சம் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். அம்பாந்தோட்டை, காலி மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களை இவ்வாறு இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்தால் அதனை அம்மக்கள் விரும்புவார்களா? தமிழ் மக்களாகட்டும் சிங்கள மக்களாகட்டும் எவரும் இராணுவ ஆக்கிரமிப்பில் வாழ்வதற்கு விரும்பமாட்டார்கள்.
தமிழ் மக்கள் ஜனநாயக உரிமைகளோடு வாழ விரும்புகின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பை விரும்பவில்லை. எனவே இதனை பாதுகாப்பு செயலாளர் புரிந்துகொண்டு இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும்.
காணிகள்
வடக்கில் மக்களின் காணிகளில் பெரும்பாலானவை மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இன்றும் இராணுவத்தினரின் தேவைக்காக என கூறி மக்களின் காணிகள் கைப்பற்றப்படுகின்றன.
பலாலி, காங்கேசன்துறையில் இன்னமும் தனியாருக்கு சொந்தமான காணிகள் மீள அதன் சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்படவில்லை. தொடர்ந்தும் இராணுவத்தினரின் வசமே அவை உள்ளன.
யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்து விட்டது. ஆனால் எமது மக்கள் தமது காணிகளை பறிகொடுத்த நிலையிலேயே வாழ்கின்றனர்.
நினைவுச்சின்னம்
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களு க்காகவும் போராளிகளுக்காகவும் நினைவுச் சின்னமொன்று நிர்மாணிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதனை மாகாண சபை, பிரதேச சபைகள் இணைந்து மேற் கொள்ள வேண்டும் என்றார்.