புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2014

அமெரிக்காவுக்கு கோத்தபாய கடும் கண்டனம்-BBC
இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லையென இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கான ஒரு நாள் பயணமாக நேற்று வியாழனன்று வந்த கோத்தபாய, இந்த பகுதியின் சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர் மத்தியில் தற்போதைய நிலவரம் தொடர்பாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம் என்று கூறிய அவர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட அமெரிக்க அதிகாரிகளை கடுமையாக சாடி கருத்துக்களை வெளியிட்டார்.
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க அதிகாரி ஒருவரிடம், உங்களின் கருத்துக்களை எங்களிடம் திணிக்க வேண்டாம் என்று தாம் கூறியதாக தெரிவித்த கோத்தபாய, நாட்டை வழிநடத்தக் கூடிய தகுதியுடைய தலைவர்கள் இலங்கையிலேயே பலர் இருக்கிறார்கள் என்று தான் தெளிவாக அவரிடம் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
"அமெரிக்க தூதரால் இலங்கை பிரச்சினையை தீர்க்கமுடியுமா?"
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவரால் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியுமா?", என்று வினா எழுப்பிய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய, அவர் தற்போது எல்லா இடமும் செல்வதாகவும், சிலர் அவருக்கு பின்னால் செல்வதாகவும் கூறினார்.
அவரிடம் சிலர் சில விடயங்களை சொல்கிறார்கள். நான் அவரிடம் எங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது உங்கள் வேலை அல்ல என கூறியுள்ளேன். இராஜதந்திரிகள் இராஜதந்திர வேலைகளை மட்டும் பார்க்காமல் வேறு வேலைகள் பார்க்கிறார்கள் என்று கூறினார் கோத்தபாய ராஜபக்ச.
இந்த பயணத்தின்போது மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு சென்ற கோத்தபாய ராஜபக்‌ச, மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப்பை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பில் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக அவரது கவனத்திற்கு தான் கொண்டு சென்றதாக ஆயர் பொன்னையா ஜோசப் கூறுகினறார்.
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குதல், வழக்கு விசாரனைகளை துரிதப்படுத்துதல் அல்லது புனர்வாழ்வு வழங்குதல் போன்ற விடயங்களை அவரிடம் தான் சுட்டிக்காட்டியதாகவும் இது தொடர்பில் சாதகமான முறையில் அவரது பதில் அமைந்திருந்தது என்றும் ஆயர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளையை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெனீவாவில் சந்தித்து இலங்கையின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசு தரப்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கியதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ad

ad