புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணை பின்வாங்கப்படுமா?
இதோ அண்மித்துக் கொண்டிருக்கிறது ஜெனிவாவுக்கான நாட்கள்……….இலங்கை அரசாங்கத்திற்கு இது புதிதல்ல, எனினும் இம்முறை இலங்கை அச்சத்துடனேயே இருந்து வருகிறது.வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் தாம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் இலங்கை அரசாங்கம் செய்வதறியாதுள்ளது.
உள்நாட்டில் இதனை அரசாங்கம் வெளிகாட்டிக் கொள்ளாத போதிலும் தமது பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு தூதனுப்பி ஆதரவு திரட்டி வருகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஆதரவு திரட்டும் நோக்கில் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரும் அதில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையும் தான் இலங்கையின் பயத்திற்குக் காரணம்.
இறுதிக்கட்ட யுத்தத்திற்குப் பின்னர் நாடு அபிவிருத்தியை நோக்கி நகருகின்றது.. மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர்…. நலன்புரி முகாம்கள் மூடப்பட்டுவிட்டன என அரசு என்னதான் தம்பட்டம் அடித்தாலும், பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதை ஒரு போதும் மறைக்க முடியாது.
போர்க்குற்றம் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் இலங்கைக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு முதல் மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு ஆரம்பித்த தலையிடி இன்னும் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை.
சர்வதேவசத்திற்கு நல்லபிள்ளையாக காட்டிக் கொள்ள முனையும் அதேவேளை, உள்நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமலும் மேலும் பிரச்சினைகளை உருவாக்கியும் வருகின்றது.
அமெரிக்காவும் அதன் பிரேரணையும்
ஐ.நா. மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான மற்றொரு பிரேரணை கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது.
இலங்கை என்னதான் காலில் விழுந்தாலும் தீர்மானம் நிறைவேற்றியே தீருவோம் என தெரிவித்து, இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தை பிரிட்டனும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து தயாரித்துள்ளன.
இம்முறை கொண்டுவரப்படும் பிரேரணையும் கடந்த வருடத்தினைப் போன்று அமைந்து விடுமா என சந்தேகங்கள் வலுவடைந்துள்ளன.
இந்தியாவின் ஆலோசனையின் பேரில் 4 முறை திருத்தங்கள் செய்த அமெரிக்கா, வெண்ணெய் தடவிய தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் கடந்த முறை நிறைவேற்றியது.
ஒவ்வொரு முறையும் திருத்தங்கள் செய்யப்படும் போதும் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாசகங்களின் கடுமை குறைக்கப்பட்டது.
அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக இலங்கை பயந்திருந்ததும், சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதைக் கணக்கிலெடுக்கவே இல்லை. அழுத்தங்கள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டாலும் இலங்கை அசையவே இல்லை என்றுதான் கூறவேண்டும். எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்ற திருவாசகத்தை திரும்பத் திரும்ப ஓதி வருகிறது.
ஒன்றை மட்டும் செல்லலாம். வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளோம் என கூறியதை மட்டும் இலங்கை நிறைவேற்றியிருந்தது. அதுவும் இந்தியாவின் அழுத்தமே காரணம்.
இவ்வருடமும் வெளியிடவுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தரப்போகின்றதா?
இறுதியில் பூசி மெழுகி உப்பு சப்பில்லாத தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்து ஒட்டமொத்த தமிழர்களிள் எதிர்பார்ப்பிலும் மண்ணைத் தூவி விடுமோ என பலரின் கருத்தாகவுள்ளது.
எனினும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளின் இலங்கை விஜயமும் அதன் பிரதிபலிப்புக்களும் இலங்கையை போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்லும் என அறுதியிட்டுக் கூற முடியாது.
இன்னுமொரு தலையிடியும் இலங்கைக்கு காத்திருக்கின்றது மனித உரிமைகள் மாநாட்டில் என்று சொல்லலாம்.
கடந்த வருடம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் அரசாங்கத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தமை மறுக்க முடியாது.
இலங்கையில் அவரது அவதானிப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளார்.
இவ்வறிக்கையும் இலங்கை மீதான தாக்கத்தினை ஏற்படுத்த வாய்ப்புக்கள் அதிகம். நவி.பிள்ளையின் இலங்கை விஜயமும் ஐ.நா பேரவைக் கூட்டத் தொடரில் அவர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையும் இலங்கைக்கு மீண்டும் போர்க்குற்ற விசாரணைகள் தெடர்பில் எச்சரிப்பதாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் உருவாக்கவே பிரேரணையைக் கொண்டு வந்ததாகச் சொன்னாலும், உண்மையில் அதற்கெதிரான நிலைமைகளே நாட்டில் உருவாகப் போகின்றன.
அதேநேரத்தில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்டுவரவுள்ள இந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கையில் தமது பிடியை இறுக்கலாம். தமது அதிகாரத்தின் மூலம் இலங்கையை அசைய விடாமல் பண்ணலாம் என்ற அவர்களது கனவும் நிறைவேறப் போவதில்லை. மாறாக இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையே மோலோங்கப் போகின்றது.
இறைமையில் தலையிடுவதை எந்த நாடும் ஏற்றுக் கொள்ளமாட்டாது. அதுவும் இலங்கையைப் பொறுத்தவரையில், மகிந்த அரசாங்கம் பிரச்சினையை இழுத்தடிப்புச் செய்யுமே தவிர அதற்குரிய தீர்வினைக் காண ஒரு போதும் முயற்சி செய்யாது என்பது திட்டவட்டம்.
மறுபக்கத்தில் நாம் பார்ப்போமானால், மேற்குலக நாடுகள் இலங்கையில் மூக்கை நுழைப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததில், இலங்கை அரசுக்கும் முக்கியமான பங்கு உண்டென்பதை மறுக்க முடியாது.
இறுதிக்கட்ட யுத்தம் முடிவுற்று நான்கு வருடங்களாகியும் இனப்பிரச்சினைக்கு விரைந்து ஒரு தீர்வைக் காண்பதில் இலங்கை அரசின் அசமந்தப்போக்கு, போர்க்குற்றம் தொடர்பான உள்ள விசாரணைகளை மேற்கொள்ளாமல் அதனை மூடி மறைப்பதற்கு போர்வெற்றியை எந்நேரமும் பறைசாற்றி வருகின்றமை தற்போது மேற்குலக சக்திகளுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மீண்டும் அமெரிக்கா தலைமையில் போர்க்குற்ற விசாரணை கோரியும் மனித உரிமை மீறல் குறித்தும் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினைத் தடை செய்த அமெரிக்கா, தமிழர்கள் மீதுள்ள கரிசனையில் இலங்கைக்கு எதிராக பிரேணையை கொண்டு வரவுள்ளதா என்பதையும் நாம் இங்கு அவதானிக்க வேண்டும்.
இலங்கை- அமெரிக்காவுக்கிடையிலான ஒப்பந்தம் குறித்தும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இலங்கை வான்பரப்பினை யுத்தம் போன்ற அவசர தேவைகளின் போது பயன்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா இலங்கையுடன் ஏற்கனவே உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளது.
அத்துடன் இலங்கை மற்றும் சீனா இடையிலான உறவுகள் மற்றும் இலங்கையில் சீனா செலுத்தி வரும் ஆதிக்கம் என்பன காரணமாக அமெரிக்கா, இலங்கை மீது அதிருப்தியில் உள்ளது.
சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து வரும் இலங்கை சீனாவிடம் இருந்த தற்பொழுது அதிகளவான கடனுதவிகளை பெற்று வருகிறது.
இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களில் சீனாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இதுவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை சினமடைய செய்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையை தமது வழிக்கு கொண்டு வரும் முயற்சிகளில் இந்நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இந்த குற்றச்சாட்டுக்களை இலங்கைக்கு எதிரான தமது ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதற்கு கிடைத்த துருப்புச் சீட்டாகவே இந்தப் பிரேரணை கொண்டுவருதல், நிறைவேற்றல் என்பனவாகும். உண்மையில் தமிழர்கள் மீதுள்ள கரிசனையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் மனித உரிமைகள் சபையில் பிரேரணையைக் கொண்டுவந்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு இலங்கையை இட்டுச் செல்லவும் வழிவகுத்தால் அது தமிழர் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமையும்.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா மனித உரிமை பேரவையில் பிரேரணை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு தமிழகத்தில் கொடுக்கப்பட்ட கடும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக இந்தியா, இறுதியில் அரைமனதோடு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.
எனினும் இம்முறை அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் பகிரங்கமாக எந்த கருத்துக்களை இந்தியா இதுவரை வெளியிடவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான நிலையில், மனித உரிமை பேரவையில் இம்முறையும் இந்தியா என்னசெய்யப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எதிர்வரும் ஏப்ரலில் இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டே இந்தியா இம்முறை தனது முடிவை எடுக்கும்.
இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டது. இந்நிலையில், கூட்டணிக்கு ஆதரவு தேடும் காங்கிரஸ் கட்சியினர் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவை தட்டிக்கழிக்க மாட்டார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையானது தமிழ் நாட்டில் பெரியளவில் இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்களவில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மையே.
இதனால் ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் சந்தர்ப்பத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமென்ற பயம் இந்திய காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எப்போதும் உண்டு.
எனவே நெகிழ்வுத் தன்மையினை நிச்சயம் இம்முறையும் இந்திய அரசு கடைப்பிடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எனவே ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இம்முறை இலங்கையை சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்லுமா? அல்லது இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படுமா அல்லது பின்வாங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

க.மாலா
malaprathees85@gmail.com

ad

ad