நிஷா பிரித்தானிய அரச தரப்புடன் பேச்சு! ஜெனிவாவில் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாட ஏற்பாடு
இலங்கைக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நேற்று இலங்கையிலிருந்தவாறு லண்டன் பயணமானார்.
லண்டன் சென்றுள்ள நிஷா பிஸ்வால் அங்கு பிரிட்டன் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்திவிட்டு லண்டனிலிருந்து ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அங்கு ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்கான இந்தியாவின் தூதுவரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு பிரிட்டனும் அனுசரணை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரின் லண்டன் விஜயம் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது.
அதன்படி பிரிட்டன் அரசாங்கத்தின் பல்வேறு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்களை நடத்திவிட்டு அங்கிருந்தவாறு ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிஷா பிஷ்வால் அங்கு மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
குறிப்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி திலிப் சிங்குடன் நிஷா தேசாய் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பாகவே இந்திய பிரதிநிதி திலிப் சிங்குடன் நிஷா பிஷ்வால் கலந்துரையாடவுள்ளார்.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 25 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படும் என்றும் எனினும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது தொடர்பில் எந்த விடயமும் பேசப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.