பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா,
ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள்.இதற்கிடையே வல்புனா தொடர்புடைய ஆபாச வீடியோ டேப் ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து கரீம் பென்ஜமா, வல்புனாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கேட்கும் தொகை தரப்படவில்லையென்றால், அந்த ஆபாச வீடியோவை மீடியாக்களிடம் கசிய விட்டுவிடப் போவதாக கரீம் பென்ஜமா மிரட்டியதாக, பாரீஸ் நகர போலீசில் கடந்த ஜுலை மாதத்தில் வல்புனா புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக பிரெஞ்ச் போலீஸ், கரீம் பென்ஜமாவிடம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் விசாரணை முடியும் வரை பென்ஜமாவை பிரான்ஸ் கால்பந்து சங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அதாவது வரும் மார்ச் மாதம் வரை பிரான்ஸ் அணிக்காக விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் தொடங்கவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட பென்ஜமாவுக்கு தடை இருக்காது என்றே கூறப்படுகிறது.
தனக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ட்விட்டரில் கருத்து கூறியுள்ள பென்ஜமா, பிரான்ஸ் கால்பந்து சங்கத்தின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார்.