புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013

ஜெனிவாவில் சிறிலங்காவுக்குத் தொடங்கியது தலைவலி
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில்  நேற்று இடம்பெற்ற பொதுவிவாதத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியுள்ளனர். 

இந்த விவாதம், சிறிலங்கா குறித்த விவாதமாக இருக்காத போதிலும், சிறிலங்கா நிலைமைகளை சுட்டிக்காட்டி இந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

கனடா -

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது.

“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, சிறிலங்கா தனது தேசிய செயற்திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்தவுள்ள சிறிலங்கா, கொமன்வெல்த் அமைப்பின் கொள்கைகள் மற்றும் அடிப்படைப் பெறுமானங்களின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும்.

போரின் போது இடம்பெற்ற, மனிதஉரிமை மற்றும் மனதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகளை சிறிலங்கா ஆரம்பிக்க வேண்டும்” என்று கனடா கேட்டுக் கொண்டுள்ளது.

அயர்லாந்து -

இந்த விவாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய அயர்லாந்து பிரதிநிதி, கடந்த ஆண்டில் சிறிலங்கா மிகவும் வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்தையே காட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா -

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை கவலையளிக்கிறது என்றும் பொதுவிவாதத்தில் இது குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வரவேற்பதாகவும் பிரித்தானியப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் -
நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட தேசிய செயற்திட்டத்தை ஜப்பான் வரவேற்றுள்ளது.

இந்த தேசிய செயற்திட்டத்தில் உள்ளடக்கப்படாத பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை சிறிலங்கா ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் திட்டத்துக்கு சிறிலங்கா வழங்கியுள்ள குறிப்பிட்ட ஒத்துழைப்பையும், இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்துக்கு குறிப்பாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக குழுவை வரவேற்றதையும் ஜப்பான் வரவேற்றுள்ளது.

வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவது, உரிய நேரத்தில் பொதுச்சேவை ஆணைக்குழுவை நியமிப்பது உள்ளிட்ட தேசிய செயற்திட்டமத்தை உறுதியாக நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் இருப்பதாகவும் ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.

சுவீடன் -
நீதித்துறை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து சுவீடன் பிரதிநிதி நேற்றைய விவாதத்தின் போது கவலை வெளியிட்டார்.

சுலோவாக்கியா -

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து கவலை வெளியிட்ட சுலோவாக்கியா நாட்டுப் பிரதிநிதி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக தேசிய செயற்திட்டத்தை காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒஸ்ரியா -

சிறிலங்காவில் உள்ள சிறுபான்மை தமிழர்களின் நிலை குறித்து தமது நாடு கவலை கொள்வதாக இந்த விவாதத்தில் பேசிய ஒஸ்ரியப் பிரதிநிதி தெரிவித்தார்.

டென்மார்க் -

டென்மார்க் நாட்டின் பிரதிநிதியும், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த தமது நாடு கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு - 
சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மான வரைபை அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் பிரதிநிதி வரவேற்றுள்ளார்.

அண்மையில் சிறிலங்காவின் தலைமைநீதிபதி அரசியலமைப்புக்கு மாறாக பதவி விலக்கப்பட்ட சம்பவம் அந்த நாட்டின் மனிதஉரிமைகள் நிலை சரிவைச் சந்தித்துள்ளதற்கான அறிகுறியாகும்.

பூகோள கால மீளாய்வின் போதும் சிறிலங்கா பொறுப்ப்புகூறல் பற்றிய பரிந்துரைகளை நிராகரித்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பசுமைத் தாயகம் -
பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதி உரையாற்றியபோது, சிறிலங்காவில் 2009இல் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தற்போது, மத்திய அரசின் அதிகாரங்களை அரசியலமைப்புக்கு முரணாக விரிவாக்கவும், சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது.

சுதந்திரமான அனைத்துலக ஆணைக்குழு மூலம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அனைத்துலக கல்வி அபிவிருத்தி நிறுவனம் -

அனைத்துலக கல்வி அபிவிருத்தி நிறுவனம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது, பெரியளவிலான கொடுமைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட போது அவர்களுக்கு உதவ ஐ.நாவும், அனைத்துலக சமூகமும் தவறிவிட்டன.

சிறிலங்காவில் தமிழ் மக்கள் இன்னமும் மனிதஉரிமை மீறல்களாலும், இனஒதுக்கலாலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு அனைத்துலக சமூகமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad