புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2016

என்னைப் பற்றி கதைப்பதற்கு ஸ்ரீநேசனுக்கு அருகதையில்லை:- கருணா பதில்!


தமிழைப் பற்றியும் தமிழனைப் பற்றியும் கதைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு எந்த அருகதையும் இல்லையென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையிலே பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் சுவிட்ஸர்லாந்து பயணமானார். அப்போது அவர்  லங்காசிறிக்கு வழங்கிய செவ்வியில்  முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பற்றியும் கருத்து வெளியிட்டிருந்தார்.
அது பற்றி முன்னாள் பிரதி அமைச்சர் ஊடகங்களிற்கு இன்று (26) அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் லங்காசிறிக்கு வழங்கிய செவ்வியில் என்னையும் சாடியுள்ளார். அவருக்கு பதில் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். முதலில் ஸ்ரீநேசன் அவர்களே உங்களுக்கு நன்றாகத் தெரியும் கல்விமான்களை பெருமிதத்தோடு மதிப்பவன் நான்.
ஏனென்றால், நான் அபிவிருத்தி குழுத்தலைவராக இருந்தபோது நீங்கள் எனக்கு கீழ் கடமையாற்றியுள்ளீர்கள். உங்களையும் எவ்வாறு நான் மதித்து நடந்துள்ளேன் என்பது உங்களுக்கு நன்கு தெரியும் ஆனால் ஒரு கல்விமானுக்குரிய முதிர்ச்சியோடு உங்கள் பதிலை காணவில்லை.
நான் சுயநலத்திற்காக பிரிந்ததாக முட்டாள்தனமாக கூறுகின்றீர்கள். நீங்கள் அரசியலுக்கு பாலர் வகுப்புத்தான் அதற்கான நாவடக்கம் இருந்தால் நல்லம் என்று நினைக்கின்றேன்.
நான் பத்தொன்பது வயதில் தமிழனுக்காக ஆயுதமேந்தி இன்றுவரை தமிழனுக்காக உழைப்பவன். உலகம் முழுவதும் சென்று தமிழனுக்காக பேசியவன் எவ்வளவு தடைகளை தாண்டியிருப்போம் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். இரண்டு முறை பாராளுமன்றத்திலும் இருந்துள்ளேன் என்பதும் உங்களுக்கு தெரியாத விடயமில்லை.
வெண்ணை திரளும் போது தாச்சியுடைந்த கதையை கூறுகின்றீர்கள் அந்த வெண்ணையை திரட்டிபார்த்திருந்தால் அதன் அருமை உங்களுக்கு புரியும்.
உங்களுக்கு தெரியுமா எத்தனை ஆயிரம் போராளிகள் வடக்கிலே மடிந்துள்ளார்களென்று. இதெல்லாம் உங்களுக்கு எங்கே விளங்கப்போகின்றது.
நல்லாட்சி என்று கூறி மக்களை ஏமாற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து நக்கி பிழைப்பு நடத்தும் கூட்டம்தான் நீங்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
பிள்ளையானுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை அவர் ஒருகட்சியின் தலைவர் நான் ஒரு தேசிய கட்சியை சேர்ந்தவன் அவ்வளவுதான்.
அதுசரி நீங்கள் என்னத்தை சாதிக்கப்போகின்றீர்கள்? உங்களால் ஒருதீர்வை பெற்றுத்தர முடியுமா? அல்லது ஒரு சிறு அபிவிருத்தியாவது செய்யமுடியுமா? அபிவிருத்தியே நடக்கவில்லை என்றெல்லவா கூறுகின்றீர்கள். அபிவிருத்தியென்றால் என்னெவென்று தெரியுமா உமக்கு.
ஒருநாட்டின் முதுகெலும்பே வீதி அபிவிருத்திதான் அதுமட்டுமா செய்துள்ளோம். மின்சார தேவையை பூர்த்தியாக்கி கொடுத்துள்ளோம்.
ஏன் உங்கள் ஊருக்கும் ஒளியேற்றிவைத்தவன் நான்தான். எத்தனை குளங்கள், வாய்க்கால் புனரமைப்புக்கள், பாடசாலை கட்டடங்கள், பட்டதாரி நியமனங்கள் அப்போதே எச்.என்.டி. ஏ மாணவர்களை டிக்கிரியுள்ளவர்களாக மாற்றி நியமனங்களை வழங்கியவன் நான்.
ஏன் சுற்றுலாத்துறையில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள் அதுமட்டுமா குடிநீர் விநியோகம், வைத்தியசாலைகள் என்றெல்லாம் பாரிய அபிவிருத்திகள் நடந்துள்ளது அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
நீங்கள் கிழக்கு தமிழனையே முஸ்லிம்களுக்கு அடமானம் வைத்த கயவர் கூட்டம். இதுவரையில் நல்லாட்சியில் என்னமாற்றத்தை கண்டுள்ளீர்கள். உங்களால் வடகிழக்கை இணைக்கமுடியுமா? சர்வதேச விசாரணையை கொண்டு வரமுடியுமா?
காணாமல் போனவர்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? அது தானே ரணில் திட்டவட்டமாக கூறியுள்ளார் காணாமல் போனவர்களெல்லாம் இறந்திருக்க வேண்டுமென்று. அவ்வாறாக இருந்தால் எவற்றை சாதிக்கப் போகின்றீர்கள்.
அங்கே சுமேந்திரன் பாராளுமன்றத்தில் கூறினார் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று, சம்பந்தரோ இலங்கை தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் புலிக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென்று, அடி முடி தெரியாமல் நீங்கள் வேறு பேசுகின்றீர்கள் ஏற்கனவே ரி என் ஏ பிளவுபட்டுள்ளது.
என்ன ஐயா உங்களுடைய கூத்துக்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் எல்லாவற்றையும் பெற்றுவிடலாம் என்று பகல்கனவு காணவேண்டாம், ஏனென்றால் அமிர்தலிங்கம் இதைவிட பலமான எதிர்கட்சி தலைவராகத்தான் இருந்தார். என்னத்தை பெற்று தந்தார்? உங்களுக்கெல்லாம் எங்கே வரலாறு விளங்கப்போகின்றது.
இன்னும் உங்கள் பொய்களை மக்கள் நம்பப்போவதில்லை. நீங்கள் பாராளுமன்றத்திற்குள் எத்தனை அறைகள் இருக்கின்றது என்று கண்டு பிடிப்பதற்குள் பாராளுமன்றம் கலைந்து விடும். கவலைப்படாமல் காலத்தை கடத்துங்கள் ஸ்ரீநேசன் அவர்களே” என தெரிவித்துள்ளார்.

ad

ad