தஞ்சாவூரில் தேமுதிக சார்பாக நடந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், ஜெயலலிதா படம் போட்ட அதிமுக பேனர்களை கிழித்தெறியுங்கள் என தன் கட்சியினரை பார்த்து பேசினார்.
இதையடுத்து தேமுதிகவினர் சிலர், அங்கிருந்த அதிமுக பேனர்களை கிழித்தெறிந்தனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அதிமுகவினர், தேமுதிகவின் பேனர்களை தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினர் பல இடங்களில் தேமுதிகவினருக்கு எதிரான போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், தேமுதிகவை போன்று தரம் தாழ்ந்த நடவடிக்கையில் இறங்க வேண்டாம் .
விஜயகாந்த்துக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
மேலும், நீங்கள் சட்டம் தன் கடமையை செய்யும் என விட்டுவிட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உயிர் மூச்சாக கொண்டு செயல்பட வேண்டும் எனவும் அதிமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
|