புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2013

வடமாகாண தேர்தலில் தயா மாஸ்டரோ, கேபியோ எவர் வந்தாலும் மண்ணையே கௌவுவர்!- விநாயகமூர்த்தி பா.உ.
வட மாகாணசபைத் தேர்தலில் தயா மாஸ்டரோ,  கேபியோ என எவர் போட்டியிட்டாலும் அனைவரும் மண்ணையே கௌவுவார்கள் என்றும், அவர்களது வெற்றி வாய்ப்பு நூற்றிற்கு பூச்சியமே எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
வட மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்கவே தயா மாஸ்டருடன் கதைக்க விரும்பியிருந்தார். ஒரு முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என்ற வகையினில் நானே அவருக்காக தயா மாஸ்டருடன் தொடர்பு கொண்டு பேசியுமிருந்தேன். எனினும் தயா மாஸ்டர் ரணிலுக்கு பதிலுக்கு தொலைபேசி அழைப்பு எதனையும் எடுத்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே விநாயகமூர்த்தி பா.உ. மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் குடாநாட்டிற்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தரப்புக்களையும் சந்தித்திருந்தார். அவ்வகையில் என்னையும் சுன்னாகத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் சந்தித்திருந்தார்.
அப்போது தான் தமிழ் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் டக்ளஸையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர் தயா மாஸ்டரையும் சந்திக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும் எனினும் அவர் தொலைபேசி அழைப்புக்களிற்கு பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஒரு முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவருடன் உரையாட நானே தயா மாஸ்டருடன் தொடர்பு கொண்டு பேசியுமிருந்தேன். எனினும் தயா மாஸ்டர் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு எதனையும் எடுத்திருக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் கொழும்பில் ஜ.தே.க நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தம்முடன் இணைந்து போட்டியிட தயா மாஸ்டர் விரும்பியிருந்ததாக அறிவித்ததனை தான் பின்னதாகவே அறிந்து கொண்டதாகவும் விநாயகமூர்த்தி பா.உ. தெரிவித்தார்.
இதனிடையே மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோருக்கான வழக்குகளில் தானே நீதிமன்றில் வாதாடி வருவதாகவும், தயா மாஸ்டரோ, கேபியோ எவர் வந்தாலும் அனைவருமே வட மாகாணசபை தேர்தலில் மண்ணையே கௌவுவார்களென்றும், அவர்களது வெற்றி வாய்ப்பு நூற்றிற்கு பூச்சியமேயெனவும் தெரிவித்தார்.
அத்துடன், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களது ஆத்மாக்கள் துரோகமிழைப்பவர்களை சும்மாவிடாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக எவர் இருப்பினும் பெரும்பான்மை வெற்றியைப் பெறுமென தெரிவித்த அவர், ஆரம்பங்களில் தயா மாஸ்டர் போன்றவர்களை கூட்டமைப்பிற்குள் இணைத்துக் கொள்வது பற்றி மாவையிடம் எடுத்துக் கூறியிருந்த போதும் அவர் அக்கறை காட்டியிருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad