கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் முடிவே தமது கட்சியினதும் முடிவாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மீம் அப்சல்,
“காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலர், பிரதமர் மன்மாகன்சிங் கொழும்பு செல்லக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
தமது கருத்தை வெளியிடுவதற்கு எவருக்கும் உரிமை உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டின் நிலையில் இருந்து பார்க்கிறார்கள்.
தேசிய நலனைக் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும்.
நாட்டின் நலன்கருதிய முடிவாகவே எடுக்கப்படும் என்று நாம் நம்புகிறோம்.
மன்மோகன்சிங் கொழும்பு சென்றால், தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வீழ்ச்சி ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.
அங்கே காங்கிரஸ் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியடையலாம். ஆனால், தேசிய நலன் தான் முக்கியமானது என்பதே காங்கிரசின் நிலை.
பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் முடிவு தான் காங்கிரசின் முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில், இந்தியா பங்கேற்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அதில் சில முன்னேற்றம் காணப்படுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும்படி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேரடியாக அழைப்பிதழை கையளித்துள்ளார்.
அதனால், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் உரிய முடிவு எடுப்பர்” என்று கூறினார். |