யாழில். பச்சை மிளகாய் திருடன் கைது
கொடிகாமம், கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்களைப் பிடுங்கி சாவகச்சேரி பொதுச்சந்தையில் மலிவு விலையில் விற்பனை செய்து வந்த சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்கள் கடந்த ஒரு வார காலமாக இரவு வேளைகளில் திருட்டுப் போவதாக குறித்த தோட்டங்களின் உரிமையாளர்களான விவசாயிகள், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
சந்தையில் 400 ரூபா தொடக்கம் 600 ரூபா வரையில் பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற போதும், ஒரு நபர் மட்டும் 150 ரூபாவிற்கு பச்சை மிளகாய்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அவதானித்த விவசாயிகள் மேற்படி சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று சிவில் உடையுடன் சந்தையில் மறைந்திருந்த கொடிகாமம் பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பொலிஸார், மேற்படி நபர் பச்சை மிளகாய் வியாபாரம் செய்யும் போது கைது செய்தனர்.