புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2015

தேர்தல் காலத்தில் வன்முறைகளுடன் தொடர்புபட்டால் வாக்களிக்க அனுமதியோ, பிணையோ வழங்க முடியாது; இளஞ்செழியன் அறிவிப்பு


நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
 
நீதவான் நீதிமன்றம் ஒன்றின் விளக்கமறியலில் இருக்கும் கைதிக்கு பிணை கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவொன்றை குறுகிய காலத்தில் விசாரித்து பிணை வழங்க வேண்டும் என கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும், 
 
தேர்தல் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்திற்குப் பிணை கேட்டு வந்தால் தேர்தல் காலத்தில் பிணை மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படமாட்டாது.
 
அதேபோல பிணை கேட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற பிணை மனு சம்பந்தப்பட்ட குற்றத்தின் தன்மை, சமூகத்தின் நன்மை, ஜனநாயகத் தேர்தலின் சுயாதீனம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, ஒழுக்கமில்லாத வேட்பாளருக்கும் வாக்காளருக்கும் தேர்தல் தினத்தன்று வாக்களிக்க முடியாத அளவுக்கு பிணை மறுக்கப்படும். 
 
ஜனத்தை மதிப்பதே ஜனநாயகமாகும். எனவே மக்களுக்கு மதிப்பளித்து, அமைதியான தேர்தல் கால கள நிலைமையை ஏற்படுத்துவதற்கும், மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிப்பதற்கும் ஏற்ற தேர்தல் கள சூழலை தேர்தல் காலத்தில் ஏற்படுத்த வேண்டும். 
 
எனவே, பாரிய குற்றச் செயல்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டு, விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு, தேர்தல் காலத்தில் பிணை வழங்க  முடியாது. பிணை மனுக்களை விசாரணை செய்யவும் முடியாது.
 
அத்தகைய குற்றவாளிகளுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது சமூகத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறு பிணை வழங்கினால் தேர்தல் வன்முறையாளர்களுக்கு வன்முறையில் ஈடுபடுவதற்கு லைசன்ஸ் கொடுப்பது போலாகிவிடும். 
 
எனவே, எதிர்கால வன்முறை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். 
 
மேலும் குறித்த பிணை மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=615094142211809375#sthash.ViwBvsXY.dpuf

ad

ad