கெஜ்ரிவால் உட்பட 28 எம்.எல்.ஏ.க்களும் ரயிலில் சென்று பதவியேற்பு! ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!
இதுதொடர்பாக காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா, சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட, 28 எம்.எல்.ஏ.க்களும், மெட்ரோ ரயில் மூலம் பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வருவார்கள்.
இதன் மூலம் அரசியல்வாதிகளின் வி.ஐ.பி. கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்படும். எம்.எல்.ஏ.க்களும் மக்களில் ஒருவர் தான் என்பதை உணர்த்தும் முயற்சி இது. கசம்பி மெட்ரோ ரயில் நிலையத்தில் காலை 11 மணியளவில் கெஜ்ரிவாலுடன் இணைந்து, ராம் லீலா மைதானத்திற்கு செல்ல உள்ளதாக கூறினார். பதவியேற்பு விழா முடிந்த பின்னர் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, காசியாபாத்தில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்த 5 போலீசாரை திருப்பி அனுப்பிய அவர், தனக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை என போலீஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளார்.